ATM இயந்திரம்
தற்போது நாம் பயன்படுத்தும் ATM இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ஜான் ஷெப்பர்ட் பரோன் என்பவர்தான். இவர் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர். இவர் ATM இயந்திரத்தை கண்டுப்பிடித்ததற்கான காரணமே சுவாரஸ்யம்தான்.
இவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு ஒருநாள் அவசர தேவைக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அன்று அவர் பணத்தை எடுத்திருந்தால் நமக்கு இன்று ATM இயந்திரம் கிடைத்திருக்காது. அன்று அந்த வங்கி பூட்டப்பட்டிருந்தது.
கடுப்பாகி போன ஜான் ஷெப்பர்ட் என்னுடைய பணத்தையே நான் நினைத்த நேரத்தில் எடுக்க முடியவில்லையே இதற்கு மாற்று கண்டிப்பாக நான் உருவாக்குவேன் என்று முடிவெடுத்து யோசித்து கொண்டிருந்தார். ஒருநாள் சாக்லேட் தானியங்கி இயந்திரங்களை கண்டதும் சட்டென்று அவருக்கு மூளையில் மின்னல் வெட்டி அதே மாடலில் ATM இயந்திரத்தை கண்டுபிடித்தார். முதல் ATM இயந்திரம் லண்டனில் ஜூன் 27, 1967 ஆம் ஆண்டு முதல் தனது பணியை தொடங்கியது.
4 இலக்க பாஸ்வேர்டு
ATM இயந்திரத்தை கண்டுபிடித்ததும் அதை பயன்படுத்த தேவையான பாஸ்வேர்டு 6 இலக்கங்கள் கொண்டதாகத்தான் முதலில் ஜான் ஷெப்பர்ட் உருவாக்கினார். அதை பரிசோதிப்பதற்காக தனது மனைவியான கரோலினிடம் 6 இலக்கங்கள் கொண்ட பாஸ்வேர்டை நினைவில் வைத்து பயன்படுத்தும்படி கூறினார்.
ஆனால் கரோலினுக்கு 6 இலக்கங்கள் கடினமாக இருந்தது. மேலும் சிலரும் சராசரியாக மனித மூளை 4 இலக்கங்களை தாராளமாக நினைவில் வைத்துக்கொள்ளும் என்று ஷெப்பர்டிடம் கூற அவரும் ATM பாஸ்வேர்டை 4 இலக்கங்கள் கொண்டதாக மாற்றினார். இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
வங்கி பூட்டியிருந்தால் நண்பன்கிட்ட கைமாத்து வாங்குறத விட்டுட்டு மனுஷன் கோவப்பட்டு இப்படி ஒரு கண்டுபிடிப்ப கொடுத்துருக்காரு…!